திங்கட்கிழமை, 17 செப்டம்பர் 2018 00:00
ஆசியா கோப்பை கிரிக்கெட் : ஆப்கானிஸ்தான் வெற்றி - வெளியேறியது இலங்கை
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 3-வது ஆட்டத்தில் இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முகமது ஷேசாத், ஜனத் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஷேசாத் 34 ரன்களும், ஜனத் 45 ரன்களும் எடுத்து வெளியேறினர். அடுத்து இறங்கிய ரஹ்மத் ஷா பொறுப்புடன் விளையாடி 72 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்
அதன்பின் இறங்கிய வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. இதனால் ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயம் செய்யப்பட்ட 50 ஓவரில் 249 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இலங்கை அணி சார்பில் திசாரா பெராரா 5 விக்கெட்களை வீழ்த்தினார்.
இதையடுத்து, 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. ஆனால், ஆப்கானிஸ்தானின் சுழல் பந்துவீச்சு மற்றும் அற்புதமான பீல்டிங்கால் இலங்கை அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்தது.
இதனால் இலங்கை அணி 41.2 ஓவரில் 158 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் உபுல் தரங்கா 36 ரன்னும், திசாரா பெராரா 28 ரன்னும் எடுத்தனர். இதைத்தொடர்ந்து 91 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருதை ரஹ்மத் ஷா வென்றார்.
ஆப்கானிஸ்தான் அணி சார்பில் முஜீப், ரஷித் கான், மொகமது நபி, நயிப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த தோல்வி மூலம் ஆசிய கோப்பை தொடரில் இருந்து இலங்கை அணி வெளியேறியது.
Published in
விளையாட்டு